31 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் விலை!

சென்னை உட்பட தமிழகத்தின் 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், சிவகங்கை, அரியலூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை 101 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 30 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 49 பைசாவாக உள்ளது.
பெட்ரோல் விலையை போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 93 ரூபாய் 46 பைசாவாக உள்ளது.
இப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.