மக்கள் நீதி மய்யத்தின் புதிய நியமனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிளவு ஏற்பட்டது. கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த பலரும் கட்சியை விட்டு விலகினர்,
அவ்வாறு விலகிச் சென்றவர்களுக்குப் பதிலாக புதியவர்களுக்கு மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளார். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகராக பழ. கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன், பொதுச் செயலாளர் பதவியையும் இனி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘
மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கமல்ஹாசன் கூறி இருந்தார். இந்த நிலையில், இன்று (ஜூன் 26) நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.
புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.
புதிய மாநிலச் செயலாளர்கள், ஏற்கெனவே நமது கட்சியின் வேட்பாளர்களாகக் கடந்த சட்டச்பை தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும், அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.
சிவ.இளங்கோ, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.
செந்தில் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். ‘நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.
சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவோராகத் திகழ்பவர். புட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.
புதிய நியமனங்கள்:
- பழ.கருப்பையா – அரசியல் ஆலோசகர்
- பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
- ஏ.ஜி.மவுரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
- தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
- செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
- சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
- சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
- ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
- ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்புமிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்துக் கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.