குறுவை சாகுபடிக்கு முதலமைச்சரின் அதிரடித் திட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார்.
இந்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்காக 61.09 கோடி ரூபாயிலான தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’ குறுவை நெல் சாகுபடியில், உயர் மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில், 61.09 கோடி ரூபாய் செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம், அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும், கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் செயல்படுத்தப்படும். இதன் காரணமாக, குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட, கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.