இனி வீட்டில் இருந்தே மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்
கொரோனாவின் பாதிப்பு அறிகுறிகள் லேசாக தெரியும் போதே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், வீட்டில் இருக்கையில் என்னென்ன சிகிச்சை எடுக்க வேண்டும் என சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்.
அதனைப் போக்குவதற்காக வீட்டில் இருந்த படியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக சேலம் ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘
பொதுமக்கள் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி சார்பில், ‘சேலம் மாநகராட்சி வி-மெட்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியை செல்போனில் பெற கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ‘Salem Corporation V med’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதை பயன்படுத்தி மருத்துவரின் ஆலோசனை மற்றும் காணொலி மூலம் மருத்துவர் குழுவுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் செல்போன் வாயிலாக தொடர்பு கொள்ளும்போது மருத்துவர்கள் கணினி செயலி வாயிலாக தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை வழங்குவர்.
தொடர்பு கொண்டவருக்கு தேவையான சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.
மருத்துவக் குழுவினரின் கலந்தாலோசனைக்கு பின்னர், சிகிச்சை முறைகள் தொடர்பாக காணொலி மூலம் மருத்துவர் விளக்குவார். காணொலி நிறைவடைந்தவுடன் மருத்துவ குறிப்பு தொடர்பு கொண்டவரின் மின்னஞ்சல் மற்றும் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மருத்துவர்கள் அனுப்பும் மருத்துவக் குறிப்பின் அடிப்படையில் தொடர்பு கொண்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாம்.
ஆலோசனைகளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு பெறலாம். தற்போது, இரு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குவர். மேலும், மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் இச்சேவையில் இணைக்கப்பட உள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.