மத்திய அமைச்சரைக் காணவில்லை யாராவது பார்த்தீர்களா? ப. சிதம்பரம் கேள்வி

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையைத் தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் வராததால் ஜூன் 2 ஆம் தேதி முதல் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வரதன், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடே கிடையாது என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில், “தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன்-2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?” எனப் பதிவிட்டுள்ளார்.