ஓவியர் இளையராஜாவுக்கு முதல்வர் இரங்கல்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்படும் தொற்று பாதிப்பால் பலர் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா. சென்னையில் வசித்து வரும் இவர் அக்கா மகளின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்று வந்துள்ளார்.
அங்கு சென்று வந்த சில நாட்களில் இவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வீட்டில் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜா மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.
இவரது இறப்பிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர். ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்”என தெரிவித்துள்ளார்.