மூன்றாவது அலை வந்தால் அதைச் சமாளிக்க தனி குழு – ராதா கிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
தொற்று பாதிப்பை மேலும் குறைக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஸன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரித்து அரசு நடவடிக்கை எடுத்தது.இதனால் தமிழகத்தில் ஆக்ஸிஜன் கட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
சேலம், இரும்பாலை வளாகத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பார்வையிட்டார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசின் நடவடிக்கையால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
ஆனால், அதற்காக மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. சிறிய அறிகுறிகள் தெரிந்தாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் கூடுதல் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.