தாசில்தாருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற கிராம உதவியாளர்!

கடலூர் மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்த மாரியம்மாள், பாதிரிக்குப்பம் விஏஓ அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிதேவிக்கும் பணியின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இதில் விரக்தியடைந்த, மாரியம்மாள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாரியம்மாள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து தாசில்தாருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், விஏஓ லட்சுமிதேவி, தன்னை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வழக்கமாக அமரும் இடத்தில் அமர அனுமதிக்காமல், மறைவாக அமரக்கூறி நாற்காலியை தூக்கி எறிந்ததால் மனமுடைந்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.