ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள் – கமலஹாசன்
கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் கோவீஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் இதுவரை ஒரு கோடிக்கும் மேலானோருக்கு போடப்பட்டுள்ள நிலையில், 2-வது கட்டமாக இன்று முதல் 60 வயதை கடந்தவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வகையான இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
மக்களிடம் அச்சத்தைப் போக்கும் வகையில், பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் இன்று, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். பின், “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்” என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.