பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை குறைந்துள்ளது – எச்.ராஜா

பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து, காஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் நேற்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ”2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.35.71 என இருந்த பெட்ரோல் விலை, அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல், காங்கிரஸ் ஆட்சி முடிந்து, பாஜக அரசு பொறுப்பேற்றபோது ரூ.74.71 ஆக உயர்ந்து இருந்தது.

தற்போது பாஜக ஆட்சியில், கடந்த 7 ஆண்டுகளில் ரூ.18 உயர்ந்து லிட்டருக்கு ரூ.92-க்கு விற்பனையாகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் லிட்டருக்கு ரூ.39 உயர்ந்திருந்தது.

அதேபோல, 2004-ல் காங்கிரஸ் கட்சியில் ரூ.266 ஆக இருந்த காஸ் சிலிண்டர் விலை, 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல் ரூ.920 ஆக உயர்ந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.140 விலை குறைந்து ரூ.780-க்கு விற்கப்படுகிறது. உற்பத்தி விலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், காஸ் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

அப்போது இருந்ததைவிட இப்போது காஸ் சிலிண்டர் விலை குறைவுதான். விலை உயர்வு என இப்படி மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருவதால் அவரை புழுகுமூட்டை என மக்கள் நினைக்கிறார்கள்.
எனவே மக்கள் திமுக- காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பாவத்தின் சுமை தாங்காமல்தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.