உயர்கல்வித் துறை ஆசிரியர் நியமனம் குறித்து மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

உயர்கல்வித் துறையின் நிலவரம் பற்றிய புள்ளிவிவரங்கள் கொண்ட ஆண்டறிக்கையை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2019 முதல் 2020 ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
இதில் உயர்கல்வித்துறை ஆசிரிய நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக இருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த ஆண்டறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இந்திய ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2019 -20க்கான ஆண்டறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.மேலும், 2014- 15 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தமுள்ள 14,73,255 ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி பிரிவினர் 7.1 % ம், எஸ்டி பிரிவினர் 2.1 %ம் முஸ்லிம்கள் 3.2 %ம் இருப்பது தெரியவந்ததாகவும், தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில் இந்தியா முழுவதும் உயர்கல்வித்துறையில் 15 ,03 ,156 பேர் ஆசிரியர்களாகப் பணிபுரிவதாகவும், அதில் எஸ்சி பிரிவினர் 9% ம், எஸ்டி பிரிவினர் 2.4%ம், முஸ்லிம்கள் 5.6%ம் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி, “2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எஸ்சி பிரிவினர் 16.6 விழுக்காடும், எஸ்டி பிரிவினர் 8.6 விழுக்காடும் ,முஸ்லிம்கள் 14.2 விழுக்காடு உள்ளனர். இந்திய அளவில் எஸ்சி பிரிவினருக்கு 15 % எஸ்டி பிரிவினருக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் ஆண்டறிக்கையில் கண்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு உயர்கல்வித் துறையில் பெருமளவில் புறக்கணிக்கப்படுவதை அறிய முடிகிறது. இது அம்மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
அதுபோலவே மக்கள்தொகையில் 14.2 % இருக்கும் முஸ்லிம்கள் உயர் கல்வித் துறை ஆசிரியர் பணிகளில் தமது மக்கள்தொகை விகிதத்தில் பாதி அளவு கூட பிரதிநிதித்துவத்தைப் பெற முடியவில்லை என்பது தெரிகிறது
இந்நிலையில், இந்த புள்ளிவிவரங்களின் வழியாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு
எஸ்சி-எஸ்டி மக்களுக்கும்; முஸ்லிம்களுக்கும் உரிமைகளை வழங்குவதில் அக்கறையற்ற அரசாக இருக்கிறது என்பதற்கு இந்த ஆண்டறிக்கை ஒரு சான்றாகும்.
எனவே, இந்த அநீதிகளைக் களைந்து எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய எண்ணிக்கையில் உயர்கல்வித் துறையில் பணி நியமனம் வழங்குவதற்கு சிறப்பு பணியமர்த்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.