தீப. நடராசன் மறைவிற்கு வைகோ இரங்கல்
இலக்கியவாதியான ரசிக மணி டி.கே.சி அவர்களின் பேரனான தீப. நடராஜன் மறைந்துள்ளார். இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‘பழுத்த இலக்கியவாதியும், ரசிக மணி டி.கே.சி. அவர்களின் செல்லப்பேரனுமான, திரு தீப நடராசன் என்ற சிதம்பரநாதன் (92) அவர்கள் இயற்கை எய்திய அறிந்து வருந்துகின்றேன்.
தென்காசியில், ‘ஜோதி பிரம்ம ஞான சங்கம்’ என்ற அமைப்பை, தமது இல்லத்தில் இரண்டாவது சனிக்கிழமைதோறும் நடத்தி வந்தார். அவரனைய இலக்கியவாதிகள், அங்கே கூடி, தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். ரசிகமணியின் பாரம்பரியத்தை, இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் பங்கு ஆற்றினார். ‘தென்காசி திருவள்ளுவர் கழகம்’, ‘மூத்த குடிமக்கள் மன்றம்’ ஆகியவற்றில், முதன்மையாக வைத்துப் போற்றப்பட்டார். கி.ரா.வோடு, நெருங்கிய நட்பும், கடிதப் போக்குவரத்தும் கொண்டு, கடித இலக்கியக் களஞ்சியமாக, எழுதிக் குவித்துள்ளார். பழம்பெரும் பாரம்பரியத்தின் அடையாளமாக, தம்முடைய இல்லத்திற்கு ‘பஞ்சவடி’ எனப் பெயர் சூட்டி இருந்தார்.
தமிழ் அறிஞர் தீப. நடராசன் அவர்களது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என் தெரிவித்துள்ளார்.