பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாட விரும்புகிறேன்!

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் 14ஆவது சீசன் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகாமல் இருந்துவந்த நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பு போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் படி வரும் 19-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் 31 வயதான யுஸ்வேந்திர சாஹல் நேற்று அளித்த ஒரு பேட்டியில்,‘தற்போது எனது முழு கவனமும் அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டி மீது தான் இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இலங்கை தொடரில் சிறப்பான பார்மில் இருந்தேன். அதனை ஐ.பி.எல். தொடரிலும் தொடருவேன் என்று நம்புகிறேன். நான் ஓய்வு பெறும் வரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவே விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

எப்போதெல்லாம் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறேனோ? அது பெங்களூரு அணிக்காகவே இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும். கேப்டன் விராட்கோலி வித்தியாசமானவர். அவர் மெத்தனமாக செயல்படுவதை விரும்பமாட்டார். எப்போதும் களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடியவர். இது மேக்ஸ்வெல்லுக்கும் தெரியும். இதனால் இங்கு துளி கூட மெத்தனம் காட்ட வாய்ப்பு கிடையாது’ என்றார்.
