அகத்திக்கீரை ஆடும் அதிகாரத்தைக் குலைக்கும் அன்பும் ( வாவரக்காச்சி கவிதைத் தொகுப்பை முன்வைத்து…) – கணேசகுமாரன் – புத்தகப் பேச்சு

அரசியலோ அழகியலோ வாசிக்கும்போதே வலிக்க வலிக்க கன்னம் கிள்ளிப் போகும் உரிமையாளனின் எழுத்துகள் லிபி ஆரண்யாவுடையது. மோடி லட்டுக்கும் கொத்து பூந்திக்குமான தொடர்பாகட்டும் உன் டவுசரில் புகுந்து என் பால்யம் மீட்கவா எனக் கேட்கும் காதலிடம் சோடிபெருநெல்லி கிடைத்தால் நான் நீயாவேனா என்னும் ஆண் காதலின் குறும்பாகட்டும் எல்லாமே கை வந்த கலையாகிறது. கலை வந்த கைதான் என்னன்ன வேலை பண்ணுகிறது.

தூணென நின்றாலென்ன
தூரோடு சாய்ந்தாலென்ன
பப்பாளிக்கு அன்பின் வாசம்
என்று முடியும் கவிதையின் முந்தைய வரிகள் வாழ்ந்து ஓய்ந்த பெருமூச்சினை வலியுடன் கடத்திச் செல்கிறது. கழிவிரக்கமும் தமிழ்க்கவிஞர்களும் கவிதை தலைப்புக்குத் தனியாகவும் கவிதைக்குத் தனியாகவும் கைத்தட்டல் பெறுகிறது.
இளையராஜாவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கும் கவிதையும் சரி அப்டேட் செய்யப்பட்ட இன்னும் சில காதல் கவிதைகளும் சரி வலியின் மீது சுகர் கோட்டட் தடவி இனிப்பாய் கலங்கடிக்கின்றன. குணங்கெட்ட ஒரு யானை, கழிவிரக்கமும் தமிழ்க் கவிஞர்களும் போன்ற கவிதைகள் கவிஞனாய் இருக்கும் பாடுகளைப் பூச்சின்றி பேசிப்போகின்றன.
சமகால நிகழ்வுகளுக்கும் அதிகாரத்தின் சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் போக்குக்கும் தன்னளவில் எதிர்க்குரல் எழுப்புகிறது சொல்பேச்சு கேளாதீர் கவிதை. கோவிட்டால் வாசனை இழந்த மனைவியைக் கண்டு சிரிக்கும் கணவனின் செயல் கவிதைக்கு நெருக்கமில்லை என்றாலும் அந்தப் பகடி தீவிரக் கவிதைகளுக்கு நடுவில் தேவைப்படத்தான் செய்கிறது. இமயம் சரிந்தது அட்டகாசமான கவிதைப் பகடி.

சப்புக்கொட்டி தினத்தைப் பருகும் கவிதைக்கு பலே சபாஷ். சுற்றுப்புறத்தை விவரிக்கும் வர்ணனைகளில் கவிதையும் தாண்டவமாடுகிறது. கிடக்கும் அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தெருமுனை கடைக்குப் போய் டீ சாப்பிடத் தோன்றுகிறது. நாத்திகக் கவிதை, சுன்னத் கவிதை எல்லாம் சின்னச் சின்ன கேள்விகளை எழுப்பியபடி நகர்ந்தாலும் கவிதை என்ற கட்டமைப்பிலிருந்து நகரவில்லை. அன்றாடங் காட்சிகளை கவிதைக்குள் கொண்டுவந்து அதை வலியுடனும் ஆங்காரத்துடனும் காதலுடனும் பதிவு செய்த வகையில் வழக்கம்போல் லிபி இன்னொரு கவிதைத் தொகுப்பிலும் வெல்கிறார்.

அகத்திக்கீரையில் ஒழுகும் அன்புக்கு தொடுவானம் தாண்டி பின் தொடரும் எளிய ஆட்டுக்குட்டியின் மனம் வாய்த்த கவிஞனின் எழுத்துகள் வேடிக்கை காட்டிக்கொண்டே அதிகாரத்தைக் கலைத்து கேள்வி கேட்கின்றன.
தொகுப்பிலிருந்து…
அடர் காவி நிறத்தில்
கச்சிதமாய்
பிடிக்கப்பட்டதொரு
மோதி லட்டுதான்
இன்றைய இந்தியா
என்கிறாய்
காலங்காலமாய்
தட்டில் வைத்து
நீட்டப்படும்
ஒரு குத்து
கலர் பூந்தியல்லவா
இந்த தேசம்.