HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 72

வாழ்நாள் முழுதும் வழித்துணையாக

ஒரு வேலையை முடிப்பதற்காக ஓர் இடத்திற்குச் செல்கிறோம், அங்கு நமக்குத் தெரிந்தவரோ அல்லது தெரிந்தவருக்குத் தெரிந்தவரோ இருந்தால் நமக்கு ஒரு துணை கிடைத்தது போல ஒரு எண்ணம் வரும். முடிக்க வேண்டிய வேலையும் வெகு விரைவில் முடிந்துவிடும். இதெல்லாம் எப்படி? தெரிந்தவர்களால் நமக்கு ஏற்படும் ஒரு சில ஆதாயம் அல்லது நன்மை என எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லா நேரத்திலும் நடக்க வாய்ப்புண்டா? அப்படி ஏதும் சொல்லிவிட முடியாது, ஆனால் தேவையான நேரத்தில் இவை நடக்க முழு வாய்ப்புண்டு. வாழ்நாளெல்லாம் நாம் யாருக்கோ அல்லது சிலர் நமக்கோ தொடர்ந்து நன்மைகள் செய்துகொண்டே இருந்தாலென்ன.? கேட்பதற்கு நன்றாக உள்ளது ஆனால் நடைமுறைக்குப் பொருந்துமா என்றால் சற்று கேள்விக்குறிதான். 

வாழ்நாளெல்லாம் உன் கூடவே நான் இருப்பேன், உன்னை எங்கும் தனியாக விடவே மாட்டேன் இது என்மேலும், உன்மேலும் சத்தியம் என காதலிக்கும் போது சொல்லும் அதே நபர்தான் காதலித்து திருமணமாகி குடும்பம் என்றான உடன், எனக்கு இருக்குற வேலையில உன் பின்னாடியே அலையணுமாக்கும், நான் வேலைய பாக்குறதா இல்ல உன்னைய பாக்குறதா? எனத் தடித்த வார்த்தைகளாக விழும். அதற்காக இருவருக்கும் அன்பு என்பது இல்லாமல் போய்விட்டது எனும் முடிவுக்கு வந்துவிட முடியாது, மாறாக அன்பின் அடுத்த கட்டம் என்று அதைப் புரிந்து கொண்டால் இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய பூ பூத்துக்கொண்டே இருக்கும். நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை எனும் போது நட்பு மட்டும் எப்படி நிலையாக இருக்க முடியும்? நிலையான நட்பு என்பதைத் தண்டி நிலைத்த நட்பு எனும் சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். நாம் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் தொலைந்து போகாமலும், தொல்லை தராமலும் இருக்கும் பல நட்புகளை பார்த்திருப்போம். அதுபோல நாம் அமைத்துக் கொள்வது எளிதுதான்.

எதற்கும் வாதிடாமலும், சிலவற்றிற்கு உடன்படாமலும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பக்குவம் இருந்தால் நட்புகள் நம் வயப்படும். படிக்கும் இடத்தில் விட, நாம் வேலை பார்க்கும் இடத்தில் உருவாகும் நட்பு சற்று ஆழமானதும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என சில ஆய்வுகள் கூறுகிறது. படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, நிறை குறைகளைப் பற்றி அறியாது அமைவது. ஆனால் வேலைபார்க்கும் இடத்தில் அமையும் நட்பானது நம் நிறை குறைகளை முழுமையாகத் தெரிந்த ஒரு கூட்டம், அதில் நம்மை யாரென்று உணர்ந்து அமையும் அல்லது அமைத்துக் கொள்ளும் நட்பு ஆழமான மற்றும் புரிதல்களை உள்ளடக்கிய நட்பு என்பதைப் பலர் உணர்ந்து என்னிடம் பகிர்ந்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

காதலன் காதலி பிணைப்பு என்பது சில எதிர்பார்ப்புகள் உள்ளே உறங்கினாலும், ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பினால் சற்று கிரங்கிப் போய், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஒருவித அரவணைப்பில் எதிர்க்குரல் எழுப்பாமல் மேலும் கீழும் அலைபாய்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். முழுமையானப் புரிதல் ஏற்படும் போது அவர்கள் அறியாமலே ஒருவித நட்பு மேலிடும் அதுதான் அவர்களை நிலையான இடத்திற்கு இட்டுச்செல்லும். தாய் தந்தை உறவு அப்படி அல்ல, அதில் ஒரு பிணைப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அது இயற்கையே தந்துள்ள பிணைப்பு. அது வாழ்நாளெல்லாம் இருந்துகொண்டே இருக்கும்.

இவற்றை எல்லாம் இங்கு பேசுவதற்கு காரணம் உண்டு. இந்த உறவுகள் எல்லாம் நிலைத்து நம்மோடு பயணிக்க, வேலை பார்க்கும் இடத்தில் நாம் முன்னெடுக்கும் நட்பும், புரிதலுமே ஆணிவேர். ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை வேலை பார்க்கும் இடத்தில்தான் செலவழிக்கிறோம். அப்படி இருக்கும் போது அங்கு அமையும் உறவு மேம்பாடுதான் நம்மை சிறந்த மனிதனாக மாற்றும். அங்கு நம் புரிதலை சிறப்பாக அமைத்துக்கொள்ள குடும்ப சூழலும் ஒரு முக்கிய காரணியாக அமையும். மொத்தத்தில் இது ஒரு வட்டம்.

சில ஆய்வுகளின் அடிப்படையில் வாழ்நாளெல்லாம் வழித்துணையாக நாமும், பிறர் நமக்கும் இருக்க சில வழிமுறைகளை நிறுவனங்களில் கடைப்பிடிப்பது வழக்கம், அவற்றுள் சில.

உங்கள் முன்னுரிமையைக் கேளுங்கள். வாதங்கள் எப்போதும் நட்பை வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல. எப்போதும் உங்கள் கருத்தைப் பெற முயற்சிப்பதை விட ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்பதை உங்கள் முன்னுரிமையாகக் கொண்டால், நாம் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. அது நம்மை சரியான தளத்திற்கு இட்டுச் செல்லும்.

தவறு செய்யும்போது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். எப்போதும் எல்லோரும் சரியாக இருப்பதில்லை. நாம் தவறும் போதும் நம்மோடு வேலை செய்பவர் தவறிழைக்கும் போதும் ஒரே அளவீடை வைத்துப் பார்ப்பது நலம். நாம் சொல்லக்கூடிய விசயங்கள் தனிப்பட்ட தாக்குதலாக இல்லாமல் ஆக்கபூர்வமான விமர்சனமாக அமைத்துக் கொள்வது இன்னும் சாலச் சிறந்தது.

உங்கள் விருப்பங்கள், தேவைகள் மற்றும் கனவுகளைப் பற்றி நேர்மையான முறையில் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். நேர்மையே நல்ல தோழமைக்கான திறவுகோல்.

அவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். அவர்களின் நட்பு எவ்வளவு உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் உணரும் அதே பட்சத்தில் அவர்களும் அதை உணரும் நிலையை ஏற்படுத்துவது அவசியம், அதேநேரத்தில் நம் செயல்கள் உண்மையில் அவர்கள் உங்களை நம்ப முடியும் என்பதைக் காண்பிக்கும் வகையில் இருக்கவேண்டும்.

சார்புநிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் ஒருவருக்குத் துணையாக இருப்பதற்கும் அவர்களைச் சார்ந்திருப்பதற்கும் இடையில் மிக முக்கியமான கோடு உள்ளது. சார்பு என்பது, நமக்குப் பிடித்தவர் என்ன செயதாலும் அதை நியாப்படுத்தும் வகையில் இருக்கும் நட்பு நீண்ட கால நட்பாக அமைய வாய்ப்பில்லை. முறையாக அவற்றை சரிசெய்யும் பொருட்டு பாக்குவமாக எடுத்துச் சொல்லி புரிய வைப்பதில்தான் முழுமையானப் புரிதல் இருக்கும்.

அவர்களின் எல்லை தெரிந்து நடப்பது, என்னதான் நீண்ட கால நட்பாக இருந்தாலும், ஒவ்வொருவரின் எல்லையை தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம், அந்த எல்லையை இருவரில் எவர் கடந்தாலும் அங்கு விரிசல் கட்டாயம் விழும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட உலகம், தனிப்பட்ட சுதந்திரம் என்ற ஒன்று உண்டு. அதை தப்பித்தவறி தொட்டுவிடக்கூடாது.

ஒருசில செயல்பாடுகள் நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால், அதை சரியான முறையில் இதில் நான் உடன்படவில்லை என்பதை சொல்லி புரியவைத்தால், வாழ்நாளெல்லாம் நமக்கு வழித்துணையாக ஒருவர் இருந்துகொண்டே இருப்பார் 

மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெற, அதை நீங்கள் இன்னொருவரோடு பகிர்வதின் மூலமே பெற முடியும் – அன்னை தெரசா.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Enoch Thomas P says:

    Nice