‘ஜிம்நோதோராக்ஸ் தமிழ்நாடுயென்சிஸ்’ அட இது எதோ வைரஸ் இல்ல..தமிழ்நாட்டில் கண்டுபிடித்த ஒரு புதிய மீன் வகை.
வெங்கட்ராம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் ஒரு அங்கமாக தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் உள்ளது.
லக்னோவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த பணியகம், காஷ்மீர் முதல் லட்சத்தீவு வரை உள்ள நீர் நிலைகளில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில், ஈடுபட்டு வருகிறது.இங்கு, டாக்டர் பட்டம் பெற பயிலும் மாணவர் கோடீஸ்வரன், விஞ்ஞானி சுந்தர ராஜன் ஆகியோர், தமிழகத்தின் கடலோர மீன் இறங்கு தளங்களில், கள ஆய்வில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டத்தில், கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்கு தளத்தில், ஒரு அரிய வகை மீனை கண்டுடறிந்தனர். அந்த மீனை தகுந்த முறையில் பதப்படுத்தி ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் மரபணு சோதனை செய்தனர்.முடிவில், அது புதிய வகை மீன் என கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முதுநிலை விஞ்ஞானியான அனில் மொகபத்ராவுக்கு, மாதிரிகள் அனுப்பட்டது. மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தியதில் அது புதிய வகை மீன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விஞ்ஞானிகள், அந்த மீனிற்கு ‘ஜிம்நோதோராக்ஸ் தமிழ்நாடு யென்சிஸ்’ என பெயரிட்டுள்ளனர்.