முதல் பெண் வெளிநாட்டு செய்தியாளர்! ஆதனூர் சோழன்
மார்கரெட் ஃபுல்லர்
அமெரிக்காவின் உண்மையான முதல் பெண்ணுரிமைப் போராளி மார்கரெட் ஃபுல்லர்.
சமூக சீர்திருத்தவாதி, விமர்சகர், ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர் என்ற பெருமைகளும் பெற்றவர்.
இளம் வயதில் தரமான கல்வியை பெற்ற இவர், ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது, பொது இடங்களில் உரையாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதினார். ஆனால், பெண்கள் பொது இடங்களில் உரையாற்ற அந்தக்காலத்தில் சட்ட அனுமதி இல்லை.
எனவே, அவர் தான் பேச நினைத்தவற்றை எழுதி படியெடுத்து 1839-ஆம் ஆண்டு தனது 29-ஆவது வயதில் பாஸ்டனில் உள்ள புத்தக நிலையத்தில் கொடுத்தார்.
உரையாடல்கள் என்ற தலைப்பில் அவர் அதை தொகுத்திருந்தார். இந்நிலையில் தி டயல் என்ற இதழின் ஆசிரியராக அவருக்கு வேலை கிடைத்தது.
அந்த பத்திரிகையில் “தி கிரேட் லாசூட்: மேன் வர்சஸ் மென், வுமன் வர்சஸ் விமென்” என்ற தனது பெண்ணுரிமை படைப்பை வெளியிட்டார்.
அதன்பிறகு, நியூயார்க் ட்ரிபியூன் பத்திரிகையில் விமர்சகராகவும், செய்தியாளராகவும் பணிபுரிந்தார்.
சிறைகளின் நிலைமை, சீர்திருத்த கருத்துகள் என இவருடைய கட்டுரைகள் பலதரப்பட்டவையாக இருந்தன.
முதல் வெளிநாட்டு செய்தியாளராகவும் இவர் பொறுப்பு வகித்தார். 40 வயதில் திடீரென இறந்தாலும், பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்ட காலத்தில் பெண் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்ணாக இவர் கருதப்படுகிறார்.