’இது மோடியின் சூழ்ச்சித் திட்டம்’ திராவிடகழகத் தலைவர் கீ.வீரமணி கோபம்
2024- ல் நடக்கும் தேர்தல் பாஜகவை வழி அனுப்பும் தேர்தலாக இருக்கும் என்றும் தமிழகத்தில் சிறப்பாக நடக்கும் திராவிடமாடல் ஆட்சி மீது குறை சொல்ல முடியாமல் சாதிய தீண்டாமை பிரச்சனைகளை தூண்டுகின்றனர் என திராவிடகழகத் தலைவர் கீ.வீரமணி நெல்லை நடந்த பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் குலத் தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து நெல்லை பாளையங்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது . இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி கலந்து கொண்டு பேசுகை தமிழக இளைஞர்கள் படிக்க கூடாது என்ற நோக்கில் குலத்தொழில் திட்டத்தை திணிக்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.
மீண்டும் குலத்தொழிலை திணிப்பது சமூதாயத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சிக்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விஸ்வகர்மா யோஜனா திட்டம் சாதிய தொழிலை மீண்டும் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இது மோடியின் சூழ்ச்சித் திட்டம். நெல்லையில் சமீபத்தில் சாதி ரீதியாக இரண்டு பட்டியல் இன இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியை நாம் பார்க்க வேண்டும் தமிழகத்தில் திராவிடமாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ஆட்சிமீது குறைசொல்ல முடியவில்லை எனவே சாதிய, தீண்டாமை பிரச்சனைகளை திட்டமிட்டு சிலர் தூண்டிவிடுகின்றனர். 70 ஆண்டுகளுக்குமுன் திராவிட இயக்கம் போராடி குலக்கல்வி திட்டத்தை ஒழித்தது.
அதனால்தான் இன்று நாம் கல்வி கற்க முடிகிறது, வேலைக்கு செல்லும் நிலை உள்ளது . தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது . இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசு, விஸ்வகர்மா யோஜனா திட்டம், நீட்தேர்வு போன்றவைகளை கொண்டு வருகிறது . இதனை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது .
தமிழகம் அமைதிப் பூங்காவை திகழ்ந்து வருகிறது. இதனை சீர்குலைக்கவே ஒன்றிய அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருகிறது . இன்னும் 6 மாதம் மட்டுமே அதன்பின்பு நாட்டில் எந்த மூலையிலும் பாஜக ஆட்சி இல்லாத நிலை ஏற்படும் 2024 தேர்தல் பாஜகவை வழியனுப்பும் தேர்தலாக இருக்கும் என தெரிவித்தார்.