மதவாத பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவதே நம் நோக்கம்; தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன்
மதவாத பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கம் என்றும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக விடம் தங்களுக்கு ஒரு தொகுதி கேட்கப் போவதாகவும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று ஏற்காட்டில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் கட்டமைப்பை விரிவு படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கி தர வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் அல்லது பிப்ரவரி மாதத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பை நிறைவேற்றியதைப் போல சாதி மத கணக்கீடை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளது, மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறும் போது, விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து , எங்கள் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமாக பேசப்படும் என தெரிவித்தார்.
கடலூரில் இயங்கி வரும் சிப்காட்டில் 50 க்கும் மேற்பட்ட கெமிக்கல் நிறுவனங்களும், பல சாய தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இது அந்த மாவட்ட மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும். கடலூர் மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடமாக மாறி வருவதாக சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் ஒரு மகத்தான ஒரு வெற்றி கூட்டணியில் ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் பயணிக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி அடைந்திருக்கிறோம் , சட்டமன்ற தேர்தலில் வெற்றி அடைந்திருக்கிறோம் , உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வெற்றி பெற்றுள்ளோம்.
எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவரை சந்திக்க உள்ளேன் என்றார். சாதி மதங்களை கடந்து ஒட்டுமொத்த தமிழ் சாதிகளும் லட்சக்கணக்கில் உறுப்பினராக இருக்கிற தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு எம்பி தொகுதியை திமுக தலைவர் வழங்க வேண்டும்.
கொடுப்பதும், கொடுக்காமல் மறுப்பதும் பெரிய கட்சி என்கிற அடிப்படையில் அவர்களுடைய விருப்பம். அவர் கொடுக்கவில்லை என்பது தெரிந்த பிறகு நாங்கள் இந்த ஜனநாயக சக்திகளோடு தொடர்ந்து பயணித்து, இந்த மதவாத பாசிச பாரதிய ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப பயணிப்பதா? அல்லது வேறு விதமான முடிவுகளை எடுப்பதா? என்பதை எங்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டி முடிவெடுப்போம் என தெரிவித்தார்.