மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த திமுக மாமன்ற உறுப்பினர்கள்!

சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் திமுக மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், ஆணையாளர் சங்கரன் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்களுடன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. திமுக மேயர், திமுக துணை மேயர் உட்பட 48 பேர்கள் மாமன்ற உறுப்பினர்களாக  உள்ள நிலையில், மாநகர் மன்றத்தின் சாதாரண கூட்டத்தை திமுக துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் திமுகவைச் சேர்ந்த 20  மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 23 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.  

தங்களது வார்டு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடை பெறாமல் மக்களின் அடிப்படை தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள மாமன்ற உறுப்பினர்கள், மாமன்ற கூட்டத்தில் பங்கேற்று பேச ஆணையாளர் சங்கரனின் முன் அனுமதியை பெற வேண்டும் என்பதை கண்டித்தும், புறக்கணித்ததாக தெரிவித்தனர். 

சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தபடுவதற்கு முன்பு சிவகாசி நகராட்சிக்கு நூற்றாண்டு விழா நிதி தமிழக அரசு சார்பாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர் பகுதிகளின் அனைத்து வார்டுகளிலும் தேவையான நிதியை ஒதுக்கி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக மேயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டத்தில் மேயர் உள்பட 14 திமுக மா மன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேரும்,  மதிமுக, பாஜக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களும், என 25 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், 

20 திமுகவினரும், காங்கிரஸ், சுயேட்சை, அதிமுகவை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களும் என 23 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. கூட்ட முடிவில் 39 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *