முன்னாள் அதிமுக அமைச்சர் மீது பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு.!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் சார் பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு பதிவு செய்து நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான இன்பத்தமிழன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் சார் பதிவாளர் முத்துசாமி கடந்த 16ஆம் தேதி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அப்புகாரில் 21 2 2023 அன்று சார்ட் பதிவாளர் முத்துசாமியை செல்போனில் தொடர்பு கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன் தான் ஒரு நபரை அனுப்பி வைப்பதாகவும் அவரிடம் ரூபாய் 10000 கொடுத்து அனுப்ப வேண்டும் என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக சார்பதிவாளர் முத்துசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மான்ராஜ் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நகர செயலாளருமான இன்பத்தமிழனிடம் இப்பிரச்சினை தொடர்பாக பேசி இருக்கிறார்.
இதனையடுத்து இன்பத்தமிழன் தான் சார் பதிவாளர் முத்துசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட துறைகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அதனால் தன்னால் பின் வாங்க முடியாது என்றும் அவ்வாறு புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றால் ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் என்று மான்ராஜிடம் தெரிவித்ததாக சார் பதிவாளர் முத்துசாமி தனது குற்றச்சாட்டில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து இப் புகார் சம்பந்தமாக விசாரித்த நகர் காவல் துறையினர் அரசு அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன் மீது விசாரணை அதிகாரி சார்பாய்வாளர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.