பாஜக மாவட்ட செயலாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பு…!
சிவகாசி- பாஜக மாவட்ட செயலாளர் காவல் நிலையம் முன்பு தீ குளிப்பு ! ரூபாய் 51 லட்சம் பண மோசடி போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றச்சாட்டு, சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 42 ). விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு செயலாளராக பொறுப்பில் உள்ளார்.
இவர் திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனி யில் குடியிருக்கும் ஜவுளிக்கடை அதிபர் ஈஸ்வரனிடம், சுக்கிரவார்பட்டி கிராமத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் நடத்தி வரும் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமாக விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை கிரயம் முடித்து தருவதாக ரூபாய் 51 லட்சம் பெற்றுக் கொண்டு பண மோசடி செய்ததாக திருத்தங்கல் போலீசார், புகாரின் பேரில் கைது செய்து விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் அடைத்திருந்தனர்.
ஜாமினில் வெளியே வந்த சத்யராஜ் திருத்தங்கல் காவல் நிலையம் முன்பாக தனது உடையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்து விரைவாக செயல்பட்ட போலீசார்கள் தீயை அணைத்து சத்யராஜை மீட்டனர். பின்பாக சத்யராஜ் ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. சிகிச்சையிலிருக்கும் பாஜக பிரமுகர் சத்யராஜ் கூறும்போது:- 51 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக திருத்தங்கல் போலீசார் தன் மீது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைத்ததாகவும், எனவே மன உளைச்சலில் காவல் நிலையத்திற்கு வந்து தீக்குளித்ததாகவும் தெரிவித்து, தனக்கு நியாயம் கிடைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.