கோடநாடு கொலை வழக்கை விரைந்து முடிக்க ஓபிஎஸ் அணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
கோடநாடு கொலை மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி உரிய நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஓபிஎஸ் அணியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அதிமுகவும் அமமுகவும் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
முன்னதாக அதிமுக எடப்பாடி அணியினர் அதிமுக கொடியையும் கட்சி சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்கள் அதையும் மீறி அதிமுக கட்சி கொடியுடன் அமமுக கொடியும் பறக்க விட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த அதிமுக OPS தரப்பு மற்றும் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை, மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு காரணமான குற்றவாளிகள் மீது துரித நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒ.பி.எஸ் ஆதரவாளர் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஓ.பி.எஸ் அணி, அமமுக கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர்வி. ரஞ்சித் குமார் தலைமையில் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் 300 மேற்பட்ட முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை மீது அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.