அண்ணாமலையின் யாத்திரை போலியானது… முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் காட்டம்
அண்ணாமலை யாத்திரை ஃபேக் – விமர்சித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையை ஃபேக் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் விமர்சித்துள்ளார்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிஜேபிக்கும்- காங்கிரஸ்க்கும் இடையேயான தேர்தல் இல்லை அது மக்களுக்கும் பிஜேபிக்கும் எதிரான தேர்தல்..
கோவை மாவட்டம்- கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மாணவர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கலந்துகொண்டு மாணவர் பிரதிநிதிகளுடன் உரையாடினார்.
மாணவர் அமைப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகாந்த், “அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள நடைபயணம் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
அதற்கு உரிமை உண்டு. ஆனால் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள யாத்திரை ஒரு ஃபேக்(fake) யாத்திரை, அதனால் எந்த பயனும் இருக்காது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெரிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி ஒத்த கருத்துடைய கூட்டு இயக்கமாக செயல்படும்போது, அது வரவேற்கக் கூடியதாக இருக்கும். கர்நாடகத்தில் சிலிண்டர் அரசியல் மக்களிடம் எடுபட்டது போல, தமிழகத்திலும் சிலிண்டர் விலை எதிரொலிக்கும்.
சிலிண்டர் என்பது பாஜக அரசுக்கு எதிரான சின்னம், அது எல்லா மக்களுக்கும் சாத்தியமாக அமையும். 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் என்பது பிஜேபிக்கும்- காங்கிரஸ்க்கும் இடையேயான தேர்தல் இல்லை, இது அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நின்று பிஜேபியை எதிர்ப்பதற்கான தேர்தல்.
மணிப்பூர் விவகாரம் மக்களை இரண்டாகப் பிரித்து நடைபெறக்கூடிய வன்முறை, மாநில அரசாங்கங்களை அடக்கு முறையால் அடக்கி விடலாம் என்று மத்திய அரசு வைத்துள்ள அனைத்து துறைகளையும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக திருப்பு முயற்சி நடைபெற்று வருகிறது”
என தெரிவித்தார்.