கண்ணீர் சிந்திய கார்கே… உம்மன் சாண்டி உடலுக்கு  அஞ்சலி செலுத்திய ராகுல், சோனியா, மு.க.ஸ்டாலின்

உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்றார்.

அதன்பிறகு பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4:25 மணியளவில் உம்மன் சாண்டியின் உயிர் பிரிந்தது. பிரமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜானின் இல்லத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வந்து, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் பேசிய ராகுல் காந்தி, கேரளத்தின் உணர்வையும், இந்தியாவின் உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர் சாண்டி. அவர் கேரள மக்களின் உண்மையான தலைவராக இருந்தார். நாம் அனைவரும் அவரை இழந்துவிட்டோம். அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த மற்றும் கவனித்துக் கொள்ளும் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *