எச்.ராஜா கனவுதான் காண முடியும்… கழகத்தை எதுவும் செய்ய முடியாது… எம்.பி.கனிமொழி பதில்
திமுக ஆட்டம் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என எச். ராஜா ட்விட்டரில் பதிவு செய்ய அவருக்கு நேரம் உள்ளது. அவர் கனவு காணலாம் என தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் நடைபெற்ற அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள் துவக்க விழாவில் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின் கீழ் 4 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்க்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
விழாவில், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசுகையில்,
திமுக ஆட்டம் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என ஹச். ராஜா ட்விட்டரில் பதிவு செய்ய அவருக்கு நேரம் உள்ளது. அவர் கனவு காணலாம். பனை சார்ந்த தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தமிழக முதல்வர் அறிவித்தபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே முதல்முறையாக தென்திருப்பேரையில் தொடங்கப்பட்டுள்ள அம்ருத் குடிநீர் திட்ட பணி 9 மாதத்தில் முடிவடையும். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றார் அவர்