எனக்கு திருமண ஆசை வராதா? நொண்டியா? முடமா?-திருமாவளவன்
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ பாஜக ஆதரவாளர்கள் பலரால் நேற்று மாலையில் இருந்து அதிகளவில் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவரும் பாஜக ஆதரவாளரும் சினிமா தயாரிப்பாளருமான ஜெ.எஸ்.கே.கோபியும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து விமர்சித்து இருந்தார்.”மாற்று திறனாளிகளை தரக்குறைவாக அண்ணன் திருமா அவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல.” என்று குறிப்பிட்டு அவர் பகிர்ந்த வீடியோவில், “எனக்கு திருமண ஆசை வராதா? எனக்கென்று ஒரு மனைவி இருக்கிறார், எனக்கென்று ஒரு பிள்ளை இருக்கிறது, நான் வீட்டுக்கு போனால் என் குடும்பத்தை பார்த்து பேச வேண்டும் என்ற சிந்தனை வராதா? நான் என்ன நொண்டியா? முடமா?” என்று அதில் அவர் பேசுவதாக உள்ளது. அதன் பின்னர் அவர் பேசிய காட்சிகள் இல்லை.பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கடுமையாக திருமாவளவனை விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் வரும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும் பேராசிரியருமான தீபக்நாதனும் திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார்.அதில், “இப்படி பேசுவது முறையா திருமாவளவன் அவர்களே? இது போன்று நீங்கள் பேசுவது இது இரண்டாவது முறை? எந்த வகையில் நீங்கள் பேசியது நியாயம்?, உங்கள் நிலையை விளக்குவது சரி அதற்காக “நொண்டி மொடம் என்று இயாலமை சட்டிக்காட்டி எங்களை கேவலப்படுத்துபடி பேசுவது முறையா? சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை கேட்டீர்கள் சோசியல் கான்சியஸ் இல்லையா என்று! இப்போது நாங்கள் கேட்கிறோம். இதுதான் உங்கள் சோசியல் கான்சியஸா?கடும் கண்டனம்!ஏன் எங்களுக்கு திருமண ஆசை இருக்க கூடாதா? ஏன் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து வாழவில்லையா? இப்படி மாற்றுத்திறனாளிகளை குறைத்து பேசுவது உங்கள் தலைமைக்கு அழகா? I am sorry , very disappointing sir! உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்கள் போராட்டங்களை நான் பெரிதும் விரும்புபவன் நான். நீங்கள் எங்களை இழிவுபடுத்தி பேசியதை சற்றும் விரும்பவில்லை. இது தவறு! மனம் வலித்து எழுதுகிறேன் சார்!
இந்த பேச்சுக்கு டிசம்பர் 3 இயக்கம் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளார்.அவர் வெளியிட்ட வீடியோவும் ஜேஎஸ்கே கோபி பகிர்ந்த வீடியோதான். இதன் உண்மைதன்மையை ஆராய திருமாவளவன் பேசிய முழு வீடியோவை பார்த்தோம். அப்போது இந்த வீடியோவில் அவர் பேசியது உண்மைதான். ஆனால், நொண்டியா? முடமா? என்று கேள்வி எழுப்பிவிட்டு தொடர்ந்து அவ்வாறு பேசியது தவறு என்று அவரே சொல்லி விளக்குகிறார்.”அப்படி சொல்லக்கூடாது. அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. ஆனால், ஒரு புரிதலுக்காக சொன்னேன். என் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்துதான் இந்த களத்தில் நிற்கிறேன். நான் எந்த வகையிலும் தாம்பத்திய வாழ்க்கைக்கோ, குடும்ப வாழ்க்கைக்கோ தகுதியற்றவனாக இருக்கிறேன். என்று நினைக்கக்கூடாது. பெருந்தலைவர் காமராஜர் தமிழ் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னை ஈகம் அளித்துக்கொண்டார். அப்படி யாராவது ஒருவர் இருந்தால்தான் முடியும். ஆனால், அவ்வளவு ஈசியாக இந்த கைகூலி கும்பல் நம்மை இகழ்கிறார்கள்.” என்று அவர் பேசியதை வெட்டிவிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.