“பார்த்து நடக்க சொல்லுங்க… இல்லைன்னா” – மத்திய அரசை எச்சரித்த மு.க.ஸ்டாலின்!
ஆளுநர் ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால், தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. வழக்கறிஞர்கள், அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆளுநரின் செயலைக் கண்டித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநருக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக கண்டித்துள்ளார். செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, ஆளுநர் பாஜகவைபோல் செயல்படுவதை காட்டுகிறது.
அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியதால், தான் எடுத்த முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார். மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.