செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு உகந்ததா? அமலாக்கத் துறை வழக்கறிஞரை தடுமாற வைத்த திமுக எம்பி…
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
செந்தில் பாலாஜி வழக்கிற்கு ஆட்கொணர்வு மனு உகந்ததா இல்லையா என்பதை வழக்கறிஞரும் திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோ முக்கிய வாதங்களை முன் வைத்துள்ளார்.செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரிடையே காரசாரமான விவாதங்கள் 2 மணி நேரம் நீடித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஆட்கொணர்வு மனு என்பதால் செந்தில் பாலாஜியை காவலுக்கு எடுத்ததும் இந்த மனு போட வேண்டிய அவசியம் இல்லை என அமலாக்கத் துறை தெரிவித்தது.இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பை சேர்ந்த என்.ஆர். இளங்கோ முன் வைத்த வாதங்கள் என்னென்ன? ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவையும், அமர்வு நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து அமலாக்கப்பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது என தங்கள் தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்கிறோம்.
சட்டப்பூர்வ கைதாக இருந்தால் ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்கு காரணம் மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும். வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் கைது குறித்து தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை என்று தெரிவித்தனர். மீண்டும் வாதங்களை வைத்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ , அதை அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார். நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான்நீதிமன்ற காவல் முழுமையாக சட்டவிரோதமாகவோ, இயந்திரத்தனமாகவோ இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது; விசாரணைக்கு ஏற்கக் கூடியது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தோம்.
மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதன்மை அமர்வு நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைத்து இயந்திரத்தனமாக உத்தரவிட்டார். நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த எங்கள் தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 13ம் தேதி இரவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த பிரிவு தங்களுக்கு பொருந்தாது என அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதிடப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு பொருந்தாது என அமலாக்கப்பிரிவு கூற முடியாது. அந்த பிரிவை அமலாக்கப் பிரிவு பின்பற்ற வேண்டும். குற்ற விசாரணை முறைச் சட்ட பிரிவை பின்பற்றாதது அடிப்படை உரிமையை மீறியது என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என என்.ஆர். இளங்கோ வாதம் செய்தார்.