2019-ல் பாஜக ஆட்சி அமைக்க உதவ காங்கிரஸ், மஜதவில் இருந்து அணி மாறிய 8 பேர் தேர்தலில் தோல்வி
-ஊடகவியலாளர் இராகவேந்திரன்
கடந்த 2019-ம் ஆண்டில் கர்நாடகாவில் மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அப்போது இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதன் காரணமாக பாஜக ஆட்சியைப் பிடித்தது.
இடைத்தேர்தலில் அணி மாறியவர்களுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அணிமாறியவர்களில் 12 பேர் மீண்டும்எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சூழலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து அணி மாறி பாஜக ஆட்சி அமைக்க உதவிய 8 பேர் தற்போதைய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.
மஸ்கி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதிபா கவுடா பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் பசன்கவுடாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
இதேபோல ஹிரேகெருரு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பி.சி.பாட்டீல் காங்கிரஸ் வேட்பாளர் உஜ்னேஸ்வரிடம் தோல்வி அடைந்தார்.
சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுதாகர் தோல்வியைத் தழுவினார். ஒசகோட்டே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நாகராஜ் தோல்வி அடைந்தார்.
காகவாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீமந்த் பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் பலராம்கவுடாவிடம் 8,827 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இவர்கள் உட்பட பாஜக ஆட்சி அமைக்க உதவிய 8 பேர் தற்போதைய தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.