அடுத்த முதல்வர் யார்? இன்று பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில் அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.கர்நாடகாவில் இந்த மாதம் சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. 224 தொகுதிகளுக்காக நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடந்தது.இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக , மஜத ஆகியவை கடுமையாக போட்டியிட்டன. இதில் தபால் வாக்கு எண்ணப்பட்ட போதிலிருந்தே காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருந்து வந்தது. இந்த நிலையில் 135 இடங்களில் அக்ககட்சி வென்றுள்ளது.அது போல் பாஜகவோ 65 இடங்களில் வென்றுள்ளது. ஒரு தொகுதி மட்டும் விடிய விடிய எண்ணிக்கை நடைபெறுகிறது. அந்த தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஜேடிஎஸ் கட்சியோ 19 இடங்களில் வென்றுள்ளது. மற்றவை 4 இடங்களில் வென்றுள்ளன. இந்த நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா தனது தந்தையை முதல்வராக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பழைய மைசூர் பகுதியில் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு பிறகு காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றதற்கு காரணம் சிவக்குமாரின் உழைப்புதான். எனவே அவர்தான் முதல்வராக வேண்டும் என்கிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் யார் முதல்வர் என்பது குறித்து ஒரு உத்தேச பட்டியல் வெளியானது. அதில் சித்தராமையா பெயர் உள்ளது. அது போல் 3 துணை முதல்வர்களின் பெயர் பட்டியலும் வந்துள்ளது. அதில் டி.கே.சிவக்குமாரின் பெயர் இல்லை. இந்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் 135 எம்எல்ஏக்கள் கூடும் கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *