அசுரன் தனுஷ் பாணியில்… ‘படிப்பை மட்டும் பறிக்க முடியாது…’ அமைச்சர் ஐ.பெரியசாமி பஞ்ச்…
திராவிடமாடல் ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்தியுள்ளது – ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூரில் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீவல்சரகு ஊராட்சி பகுதியில் உள்ள ஆத்தூர் கூட்டுறவு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் – தமிழ்நாடு அரசு சார்பாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுபோட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, ஜெய்னி கல்விக்குழுமம் நிர்வாக இயக்குநர் எம்.சுகுமார். ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அ.வெங்கடாசலம் வரவேற்று பேசினார். விழாவில் பேச்சுப்போட்டிகளை துவக்கி வைத்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழகத்தில் பெண் சமுதாயத்தை, பெண் இனத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பொற்கால ஆட்சி திராவிடமாடல் ஆட்சி நாயகன் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கிராமப்புற பள்ளி மாணவர்களை குறிப்பாக மாணவியர்களை பள்ளிப்படிப்போடு நிறுத்திய பெற்றோர்கள் இன்று அவர்களை உயர்கல்வி கற்பதற்காக கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் என்றால் அதற்கு காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைதான் என்றார்.
இங்கு கூடியிருக்கும் மாணவ செல்வங்களுக்கு நான் விடுக்கும் ஒரே கோரிக்கை உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் மற்றவர்கள் அதை பறித்துக்கொள்ளும் நிலை வரும் ஆனால் உங்களிடம் இருக்கும் கல்வி அறிவை யாராலும் பறித்துக்கொள்ள முடியாது அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றார். அப்படிபட்ட உயர்கல்வியை நீங்கள் பெறவேண்டும் என்பதற்காகத்தான் தமிழகத்திலேயே முதன்முதலாக கூட்டுறவுத்துறை சார்பாக இங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது.
இந்த கல்லூரி கொண்டு வந்த நோக்கம் ஒரே வருடத்தில் நிறைவேறிவிட்டது. காரணம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நூற்று கணக்கான மாணவர்கள் இன்று கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பெற்றுள்ளார்கள் என்றார். அவரை அடுத்து பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசுகையில் சங்ககாலத்திலேயே பெண் புலவர்கள் இருந்துள்ளார்கள் அப்போதே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது தமிழ் இனம் அப்படிப்பட்ட தமிழ் இனத்திலிருந்து வந்த ஒவ்வொருவரும் சிறந்த பேச்சாளர்களே என்றார்.