எப்போது புரிந்துகொள்வார் ஆளுநர்…அவருக்கென்று தனி அதிகாரம் இல்லை என்று….
ஊடகர் வெங்கட்ராம்.
அமைதியாக இருந்த ஆளுநர் திரும்பவும் தன்னோட வன்மத்தை கக்க ஆரம்பித்துள்ளார் என்று தெரிகிறது.. அதாவது அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “திராவிட மாடல் என்பது காலாவதியான மாடல்” என்று கூறியுள்ளார். அது மட்டும் இன்றி “அமைச்சர் பி.டி.ஆர் தன் மீது வைத்த நிதி கையாடல் குற்றச்சாட்டு தவறானது” என்று கூறியுள்ளார். அப்படியே “சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மசோதா, பல்கலைக்கழக விதிகளுக்கு அப்பாற்பட்டு உள்ளதால் அதனை நிறுத்திவைத்துள்ளதாக” அவர் தெரிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால். ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு கருத்து கூறிவருகிறார் என்பது தான். ஆம் அரசியல் சாசனப்படி ஆளுநரால் எந்த ஒரு சட்ட மசோதாவையும் நிறுத்திவைக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது மற்றும் அவரோட சொந்த விருப்பத்தை அதில் திணிக்கவும் முடியாது என்பதை தெளிவாக கூறியுள்ளது. ஆனால் நன்கு படித்த ஆளுநர் தான் இதை எப்போது உணர்வார் என்று தெரியவில்லை.