“பிளேட்டை” திருப்பிய பன்னீர் ! ஒரே நாளில் நடந்த ஆச்சரியங்கள்!
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார்.. இந்த மாநாடு எப்படி நடந்து முடிந்தது? தாக்கம் என்ன? ஓபிஎஸ் நடத்திய இந்த மாநாடு வெற்றியா? தோல்வியா?திருச்சியில் மாநாடு என்று ஓபிஎஸ் அறிவித்ததுமே, எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு செக் வைக்க ரெடியானது.. அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது, அப்படி மாநாட்டில் பயன்படுத்தினால், கோர்ட்டுக்கு போவோம் என்றும் அடுத்தடுத்த பேட்டிகளை தந்தார்கள்இதற்கு அடுத்தபடியாக, மாநாடு குறித்து பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கும்பிடுவது போன்று வைக்கப்பட்ட பேனரை அகற்ற போலீசாரிடம் புகார் கொண்டு போனார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்.. இதனால், போலீசாரே உத்தரவிட்டு அந்த பேனர்களை அகற்ற வைத்தனர்.எடப்பாடி பழனிசாமி தரப்பு கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தும் ஓபிஎஸ் தரப்பின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகாரளித்தாலும் இது குற்றவியல் நடவடிக்கை கிடையாது, சிவில் பிரச்சனை.. அதனால் கோர்ட் மூலம்தான் நீங்கள் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இப்படி பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டாலும், மாநாடு திருச்சியில் நடந்து முடிந்துள்ளது.. இதுகுறித்த கருத்துக்களை நாம் சிலரிடம் கேட்ட முனைந்தபோது, 2 விதமான கருத்துக்கள் கூறுகிறார்கள். “தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற ஓபிஎஸ் சொல்லியும், தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை.. பணம், சாப்பாடு, குவார்ட்டர் என தந்தும்கூட, கூட்டத்தை கூட்ட முடியவில்லை.. அதனால்தான் அப்செட்டில் ஓபிஎஸ் இருக்கிறார்.. 5 லட்சம் பேர் வருவார்கள் என்றார்கள், ஆனால், வெறும் 20 ஆயிரம் நாற்காலிகள் மட்டும்தான் போடப்பட்டிருந்தது.அவ்வளவு ஏன், தன்னுடைய சொந்த தொகுதியான, தேனி மாவட்டத்திலிருந்தே வாகனங்கள் குறைவாக வந்திருந்தன.. தன் செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ்சுக்கு ரூ.20கோடி வீணானதுதான் மிச்சம்.. போதாக்குறைக்கு, கு.ப.கிருஷ்ணன் – வைத்திலிங்கம் இருவருக்கும் இடையே ஈகோ வெடித்துள்ளதால், இவர்களை சமாளிக்க வேண்டிய நிலைமையில் ஓபிஎஸ் உள்ளார்’ என்கிறார்கள் ஒருசாரார்.
ஆனால் மற்றொரு தரப்போ இதற்கு நேர்எதிரான கருத்துக்களை கூறுகிறார்கள்.. மாநாட்டில் ஓபிஎஸ் பேசியதை கவனித்தீர்களா.. கழக விதிகளை மாற்றி அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய கபட வேடதாரி, அரசியல் வியாபாரி, நயவஞ்சக துரோகி எடப்பாடி பழனிசாமி… இந்த கல் நெஞ்சக்காரர்களை ஓட, ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஐயா, எடப்பாடி பழனிசாமி, உங்களுக்கு முதல்வர் பதவியை சின்னம்மா தான் கொடுத்தார். புரட்சி தலைவரும் நீயும் ஒன்றா, அவருடைய கால் தூசிக்கு நீ வரமாட்டாய். லூசு சிவி சண்முகம்.. ஜெயக்குமார் ஒரு லூசு என்றெல்லாம் பேசியிருக்கிறார். அதாவது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காட்டமான வார்த்தைகளை ஓபிஎஸ் பயன்படுத்தியுள்ளார்.. பெயர்களை வெளிப்படையாக சொல்லி, எடப்பாடி, ஜெயக்குமார், சி.வி.சண்முகத்துக்கு எதிராக கடும் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.. இதற்கெல்லாம் என்ன காரணம்? ஓபிஎஸ்ஸூக்கு இந்த தைரியத்தையும்? துணிச்சலையும் தருவது யார்? அவருக்கு பின்னால் நிற்பது யார்? இதைதான் இங்கு கவனித்து பார்க்க வேண்டும்..
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பது தெரிந்தும்கூட, வெளிப்படையாக ஓபிஎஸ் இப்படி பேசியிருக்கிறார் என்றால், அது மேலிடத்துக்கு தெரியாமல் இருக்காது. அந்தவகையில், எடப்பாடி தரப்புக்கே இது ஷாக்தான். இன்னொன்றையும் இங்கு கவனித்து பார்க்க வேண்டும்.. தற்போதைய சூழலில், ஒரு மாநாடு நடத்துவது அவ்வளவு எளிது கிடையாது.. இந்த மாநாட்டை கடைசிவரை எடப்பாடியால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை.அதுமட்டுமல்ல, போதுமான அளவுக்கு நிர்வாகிகள் ஆதரவு இருந்தால் மட்டுமே இப்படியான மாநாடை கூட்ட முடியும்.. அதுவும் குறுகிய காலகட்டத்தில், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தி காட்டியுள்ளது ஓபிஎஸ்ஸூக்கு வெற்றிதான்… இந்த மாநாடு தந்த பூஸ்ட்தான், இனி அடுத்தடுத்த மாநாடுகளை, பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு அடித்தளமிட்டிருக்கிறது.. நீதிமன்ற உத்தரவுகள் எப்படி இருந்தாலும், பண்ருட்டியார் தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பதை போல, மக்கள் மன்றமும், தொண்டர்கள் பலமும் எங்களுக்கு இருக்கிறது என்பதைதான் ஓபிஎஸ் மாநாடு நிரூபித்துள்ளது” என்கிறார்கள்.