எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை-ஜி ஸ்கொயர் விளக்கம்
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
எங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு ஏதும் செய்யப்படவில்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அது போல் எங்கள் நிறுவனத்திற்கும் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி வந்தார். மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ 38 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.மேலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பாவது: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. அது போல் அண்ணாமலை குறிப்பிட்டது போல் அதிக அளவிலான நிலங்களை கையகப்படுத்தவும் இல்லை.அண்ணாமலையின் செயலால் எங்கள் நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பு சிதைந்துள்ளது. படித்த தலைவர் இது போன்ற கருத்துகளை கூறியதால் அதை மக்கள் நம்பும் ஆபத்து உள்ளது. மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுடைய கட்டுப்பாட்டு எங்கள் நிறுவனம் இல்லை.எங்கள் நிறுவனத்திற்கு ரூ 38, 827.70 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறிய தகவலும் தவறானது.
உண்மைக்கு புறம்பானவை, அடிப்படை ஆதாரமற்றவை. அனைத்துமே ஜோடிக்கப்பட்டவையாகும். எங்கள் நிறுவனம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எங்கள் நிறுவனம் , பங்குதாரர்களின் திட்டங்களை தவறான தகவல்களை மதிப்புகளுடன் அண்ணாமலை சித்தரித்துள்ளார்.எங்களது பல கட்டுமான திட்டங்கள் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தவறான முறையில் எங்கள் நிறுவனம் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக நம்ப வைக்கும்படி ஜோடிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.