வெயில் கொடுமையால் 11 பேர் பலி… அமித் ஷா கூட்டத்தில் சோகம்…
வெங்கட்ராம்.
மும்பை அருகில் உள்ள நவிமும்பையின் கார்கரில் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இவ்விருதை சமூக ஆர்வலர் அப்பாசாஹேப் தர்மதிகாரி என்பவருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார். விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கட்சி தொண்டர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் திறந்த வெளியில் 36 டிகிரி வெப்பநிலையில் அமர வைக்கப்பட்டனர்.
சமூக ஆர்வலரின் ஆதரவாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். பட்டப்பகலில் திறந்த வெளியில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெயிலின் கொடுமை தாங்காமல் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இன்று காலை வரை 11 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 50பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.