“எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் பிதற்றுகிறார்” பொங்கி எழுந்த டிடிவி..
வெங்கட்ராம்.
சிவகங்கை மாவட்டம், தமறாக்கியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். “எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் பிதற்றுகிறார், எனக்கு லண்டனில் சொத்து இருப்பதை காட்டட்டும். நானே அதை அரசிடம் ஒப்படைத்துவிடுவேன். எடப்பாடியின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என்றார்.
“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டனியா?” என்ற கேள்விக்கு, “கூட்டனி குறித்து இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும்” என்றவரிடம்,
`பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என ஏற்கனவே தெரிவித்த கருத்து’ குறித்த கேள்விக்கு, “அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டை பாதிக்கக்கூடிய திட்டங்களை குறிப்பாக ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் எதிர்த்த திட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய ஆளும் அரசிற்கு எதிராக அந்த கருத்தை தெரிவித்தேன். இனி வாழ்நாள் முழுவதும் இல்லை என தெரிவிக்கவில்லை, அன்மையில் கூட நிலக்கரி ஆய்வறிக்கை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். உடனடியாக மத்திய அரசும் திரும்ப பெற்றது. மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டுவந்தால் எதிர்ப்பதும், நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது ஆதரிப்பதும் இயல்பானது” என்றார்.