பள்ளி நடத்த கர்நாடகா சங்கத்துக்கு நிலம்: குத்தகை புதுப்பித்தல் குறித்து பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
-ஊடகவியலாளர் இராகவேந்திரன்
பள்ளி நடத்துவதற்காக கர்நாடகா சங்கத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தின் குத்தகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தியாகராயநகரில் கர்நாடகா சங்கத்தின் சார்பில் பள்ளி நடத்துவதற்காக, சென்னை மாநகராட்சி நிலத்தை 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியிருந்தது. இந்த குத்தகை 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின், குத்தகை காலம் நீட்டிக்கப்படவில்லை. குத்தகையை புதுப்பிக்கக்கோரிய கர்நாடகா சங்கம், அந்த இடத்தில் தொடர்ந்து பள்ளியை நடத்தி வந்தது. 2019-ம் ஆண்டு முதல் 2022 டிசம்பர் வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி 75 லட்சத்து 90 ஆயிரத்து 554 ரூபாயும், சேவை வரி 13 லட்சத்து 66 ஆயிரத்து 300 ரூபாயும் செலுத்தப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் நிலத்தை மாநகராட்சிக்கு திரும்ப ஒப்படைப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கர்நாடகா சங்கத்துக்கு, சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “குத்தகையை நீட்டிக்க கோரி அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி, தற்போது நிலத்தை எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், “குத்தகை பாக்கியை செலுத்தாமல் நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது கர்நாடகா சங்கம் தரப்பில், “குத்தகை பாக்கி முழுவதையும் செலுத்திவிட்டோம்” என்று விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “குத்தகை பாக்கியை செலுத்தி, குத்தகையை மீண்டும் புதுப்பிக்க கோரி விண்ணப்பித்துள்ளதால், மாநகராட்சி தனது விசாரணையை முடித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். அப்போது குத்தகையை புதுப்பிப்பது தொடர்பான கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, கர்நாடகா சங்கத்தின் வழக்கை முடித்து வைத்தார்.