படிங்க படிங்கனு சொன்னா கேக்குறீங்களா?அட்வைஸ் செய்யும் ஆம் ஆத்மி..
வெங்கட்ராம்.
பெர்மூடா முக்கோணம் கதையை விட மிக மர்மமாக செல்கிறது பிரதமர் மோடி படித்த டிகிரி கதை. சான்றிதழ் அடித்த காகிதத்திலிருந்து அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் வடிவம் வரை அனைத்தையும் எடுத்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள் சமூகவலைதளவாசிகள். ஆக பிரதமர் பட்டம் பெற்ற விவகாரத்தில் இன்னும் நம்பகத்தன்மை இல்லாமல் பலர் உள்ளனர். இந்நிலையில் இந்த ஒரு விவகாரத்தை ஆம் ஆத்மி கையில் எடுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஊடக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நவாப் நசீர் அமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ (மோடியை வெளியேற்றி தேசத்தைக் காப்பாற்றுவோம்) என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம். அதைப் பற்றி விளக்கவே இந்த சந்திப்பு. மோடி கல்வியறிவு அற்றவர். அவரைப் போன்ற கல்வி கற்காதவர் இந்த தேசத்தை வழிநடத்த முடியாது.இந்தியாவுக்கு ஒரு படித்த பிரதமர் தேவை. அவர் தான் வெறுப்புகளைக் கடந்து கொள்கைகளை வகுக்க முடியும். பிரதமர் மோடி நீதிமன்றங்கள், அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என எல்லாவற்றையும் சொந்த ஆதாயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கிறார். அதனால் நாம் ஒரு படித்த பிரதமரை தேர்வு செய்வோமாக என்று கூறியிருந்தார்.