கொஞ்சும் மழை ! கொஞ்சம் வெயில்!தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பிப். மாதம் வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு வெப்பம் கணிசமாகக் குறைந்தது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் குறைவாகவே இருந்தது.இதன் காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனிடையே வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (மார்ச் 27) நாளையும் (மார்ச் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேபோல நாளை மறுநாள் (மார்ச் 29) முதல் மார்ச் 31ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *