2030க்குள் உலகம் அழியும் அபாயம்…எச்சரிக்கை விடுக்கும் ஐநா IPCC அமைப்பு

வெங்கட்ராம்.

அனைவருக்குமான வாழத்தகுந்த எதிர்காலத்தை உறுதிசெய்ய, அவசரமான காலநிலை நடைவடிக்கைகள் தேவை என்று ஐநா அவையின் IPCC எச்சரிக்கை விடுத்துள்ளது. 

IPCC அமைப்பு

1988 ஆம் ஆண்டில் ஐநா அவையால், ஐபிசிசி எனப்படும் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (IPCC – Intergovernmental Panel on Climate Change) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அரசுகள் சார்பான அறிவியலாளர்கள் மட்டுமே இடம்பெற முடியும். தற்போது 195 அரசுகள் பங்கேற்கின்றன. அமைதிக்கான நோபல் பரிசினை இந்த அமைப்பு பெற்றுள்ளது.

ஐநாவின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டும் 4 உண்மைகள்:
 

1. காலநிலை மாற்றத்திற்கு மனிதர்களே காரணம்

மனித நடவடிக்கைகளால் வெளியான கரிம உமிழ்வால்தான் புவி வெப்பமடைகிறது. தற்போது உலகளவில் ஆண்டுக்கு 59 ஜிகா டன் கரியமில வாயு அளவு மாசுக்காற்று வெளியாகிறது. இது 1990ஆம் ஆண்டில் வெளியானதை விட 54 விழுக்காடு அதிகமாகும். இதனால் 1850 – 1900 மற்றும் 2011 – 2020ஆம் ஆண்டுகளுக்கு இடையே பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது.

2. நாடுகளின் தற்போதைய காலநிலை கொள்கைகள், உலகை பேரழிவில் தள்ளும்

உலக நாடுகள் தாமாக முன்வந்து 2021 அக்டோபர் மாதம் வரை ஐநா அவைக்கு அளித்துள்ள காலநிலை நடவடிக்கை வாக்குறுதிகளை வெற்றிகரமாக செயல்படுத்தினால் கூட, புவியின் மேற்பரப்பு வெப்பநிலையானது மனிதர்களால் ஓரளவுக்கு சமாளிக்கக் கூடிய உச்சவரம்பான 1.5 டிகிரி செல்சியஸ் அளவை கடந்துவிடும்.

இப்போதைய வாக்குறுதிகளின் படி, மிக மோசமான உச்சவரம்பான 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கூட புவிவெப்ப அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. உலகில் மீண்டும் சீர்செய்யவே முடியாத மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். தகவமைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

3. உலகின் கரிம பட்ஜெட் அளவை 2020 – 2030ஆம் ஆண்டுகளுக்கு இடையே முழுவதுமாக தீர்க்கப்பட்டுவிடும்

புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமெனில் – உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர், இனிவரும் பல நூறு ஆண்டுகளுக்கும் சேர்த்து, சுமார் 500 ஜிகா டன் கரியமிலவாயு அளவுக்கு மட்டுமே மாசுக்காற்றை வெளிவிட முடியும். இதுதான் ஒட்டுமொத்த உலகின் நிரந்தரமான கடைசிக்கால கரிம பட்ஜெட்.
 
உலகெங்கும் மாசுக்காற்று வெளியேற்றப்படும் தற்போதைய நிலை தொடந்தால், 2020 – 2030ஆம் ஆண்டுகளுக்கு இடையே உலகின் கடைசிக்கால கரிம பட்ஜெட் 500 ஜிகா டன் முற்றிலுமாக பயன்படுத்தி தீர்க்கப்பட்டுவிடும்!

4. காலநிலை நடவடிக்கைகள் அனைவருக்கும் நன்மை அளிக்கும்

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் எதிர்கொள்ளவும் போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளை செயல்படுத்தினால், அதனால் விளையும் கூடுதல் பயனாக மனித வாழ்க்கை இப்போது இருப்பதைவிட மேலான நிலையை அடையும். ஏழ்மை ஒழிந்து சமத்துவத்துவம் மலரும். நீர், நிலம், காற்று மாசுபாடு குறையும். மக்களின் உடல்நலம் மேம்படும்.

ஐநாவின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டும் 4 தீர்வுகள்:

1. இப்போதிருந்து – அடுத்த 7 ஆண்டுகளுக்குள் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.

உலகம் மனிதர்கள் வாழத்தகுந்ததாக நீடிக்க வேண்டும் என்றால், புவிவெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மிகாமல் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் இப்போதிலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் போர்க்கால வேகத்தில் கரிம உமிழ்வை தடுத்தாக வேண்டும். உலகைக் காப்பாற்ற, 2019ஆம் ஆண்டில் வெளியான கரியமிலவாயு அளவுக்கு கிழாக 48 விழுக்காடு மாசுக்காற்றுக் குறைப்பை 2030ஆம் ஆண்டுக்குள் சாத்தியமாக்க வேண்டும். 2050ஆம் ஆண்டிற்கு முன்பாக அது நிகர சுழிய அளவை (Net-Zero) எட்டியாக வேண்டும்.

(பொருளாதார நடவடிக்கைகளால் வெளியாகும் கரிம உமிழ்வுக்கும் இயற்கையின் கரிம நீக்கத்துக்கும் இடையேயான சமநிலை நிகர சுழிய – Net Zero – உமிழ்வு எனப்படுகிறது)

 2. உலகை காப்பதற்கான முழுமையான தீர்வுகள் 

இன்றைய மோசமான பேரழிவுப் பாதையை தவிர்த்து, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும் தேவைப்படும் தொழில்நுட்பங்களும் தீர்வுகளும் கண்டறியப்பட்டுள்ளன.மின்சார மூலங்களை மாற்றுதல், புதுப்பிக்கத் தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல், போக்குவரத்தை மாசில்லாத முறைக்கு மாற்றுதல், நகரப்பகுதிகளை மாற்றியமைத்தல், காடுகளை காப்பாற்றுதல் என அனைத்துக்கும் – மெய்ப்பிக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன.

இத்தகைய வழிமுறைகள் அனைத்தும் சாத்தியமானவை, வெற்றிகரமானவை, செலவு குறைவானவை, எல்லா பகுதிகளுக்கும் பொருத்தமானவை ஆகும். இவற்றுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பும் உள்ளது.

3. அரசியல் உறுதியின்மை, சமத்துவமின்மை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சுமையை ஏழைகள் மற்றும் ஏழை நாடுகள் மீது சுமத்தாமல் – பணம் படைத்தோரும் பணக்கார நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் அன்றும் இன்றும் காலநிலை மாற்றத்துக்கு காரணமாக உள்ளனர். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் எதிர்கொள்ளவும் தேவைப்படும் நிதியுதவி, தொழில்நுட்ப உதவிகளை பணம் படைத்தோர் ஏழைகளுக்கு அளிக்க முடியும். இதன்மூலம் எல்லோரும் ஒன்றிணைந்து தீர்வுகளை எட்ட முடியும். பேரழிவுகளை தவிர்க்க நமக்கு இப்போதும் கூட சிறிதளவு காலம் அவகாசம் இருக்கிறது. அரசியல் உறுதி இருந்தால் தீர்வை எட்டுவது சாத்தியம்தான்.

4. அனைத்து துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் அனைவரும் ஒன்றிணைந்து போர்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.

அனைத்து நிலை அரசாங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என எல்லோரும் காலநிலை செயல்பாடுகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். விதிகள், சட்டங்கள், கொள்கைகளை காலநிலை நடவடிக்கைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். காலநிலை நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை பல மடங்கு அதிகமாக்க வேண்டும்.

 – இவ்வாறு விரிவான வழிமுறைகளை ஐநா அவையின் “காலநிலை மாற்றம் 2023: தொகுப்பு அறிக்கை” (IPCC Climate Change 2023: Synthesis Report) கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *