ரூ.5 கோடியில் தயாராகும் தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல்!

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் ரூ.5 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.

கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமாகச் செல்லும் இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படகு குழாமை மேம்படுத்தி மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் கட்டப்படவுள்ளது. இத்திட்டம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக, தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் முதல் மிதவை உணவக கப்பல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படகு இல்லம் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கப்பலின் கட்டுமான பணியை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் சந்திரமோகன், மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் பாரதிதேவி, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஜோஜி செபஸ்தியான், ஒஜெஸ் செபஸ்தியான் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *