பாஜக முக்கிய புள்ளியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீர் ரைடு…!!
கோவில்பட்டியில் பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறையினர் 12 மணி நேர சோதனையில் ஹரியானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் முறைகேடாக பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் அதில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமலாக்க துறையினர் சோதனை
துத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ராஜூவ்நகர் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிவந்தியாபுரம் ஆகும் இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டிக்கு வந்து குடியேறிய வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்
இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டிற்கு காலையில் 9 மணிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் திடீர் சோதனை நடத்தினர் அப்போது சிவந்தி நாராயணன் வெளியூர் சென்றிருந்ததால் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். 3 மணி நேரத்திற்கு பின்னர் வெளியூரில் இருந்து வந்த சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் கோவில்பட்டி ஏ.கே எஸ் தியேட்டர் சாலையில் உள்ள சிவந்தி நாராயணனின் ஸ்ரீ சிவந்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சென்ற அமலாக்கத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து அவரது வீட்டுக்கு சென்ற அமலாக்க துறையில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்கு முடிந்தது சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் ஹரியானா மாநிலம் குருகிராம் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.ஹெச்.எப்.எல் நிதி நிறுவனம் திருப்பூரில் கிளை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சிவந்தநாராயணனின் தொடர்பு என்ன என்பது குறித்தும் ஸ்ரீ சிவந்தி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது செய்யபடவில்லை செயல்பட்ட காலத்தில் ஸ்ரீ சிவந்தி எண்டர்பிரைசஸ் மேற்கொண்ட பணிகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது
மேலும் தற்போது சாரல் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த சாரல் இந்தியா நிறுவனம் திருப்பூரில் கிளை நிறுவனமாக செய்படும் ஐ.ஹெச்.எப்.எல் நிதி நிறுவனத்துடன் இணைந்து துணை நிறுவனமாக செயல்பட்டபோது நடைபெற்ற பணிகள் பணபரிவர்த்தனை குறித்தும் சோதனை நடைபெற்றது மேலும் சிவந்தி நாராயணன் நடத்திவரும் அறக்கட்டளை தொடர்பான நிர்வாகப் பணிகள் பணப்பரிவர்த்தனை குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் இந்த நிறுவனங்களின் நகல்கள் முக்கிய ஆவணங்களின் நகல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராம் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.ஹெச்.எப்.எல் நிதி நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது,தனி வீடுகளை கட்டி கொடுப்பது மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், தனிநபர் கடன் தொழில் கடன் நிலக்கடன் இப்படி பல்வேறு நிதிகளை வழங்கி வருகிறது இந்நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் இந்த முறைகேடு பண பரிவர்த்தனை அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது
இதில் சிவந்தி நாராயணன் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளை விற்று கொடுப்பதும் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டுவதற்கு பணியாளர்களை அனுப்பி வைப்பதும் செய்து வந்துள்ளார் மேலும் இவர் மறைமுகமாக பல்வேறு மத்திய அரசின் திட்ட பணிகளை கமிஷன் அடிப்படையில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முன்கூட்டியே சிவந்தி நாராயணனுக்கு தெரிந்ததாக கூறப்படுகிறது. பாஜக மாநில நிர்வாகியாக இருப்பதால் அமலாக்கத் துறையின் சோதனை முன்பே இவருக்கு தெரிந்ததா என்ற கேள்விக்குள்ளாகி உள்ளது
சோதனை முடித்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் பத்திரிக்கையாளர்கள் ஏதேனும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்ற கேள்விக்கு எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என கூறினர். அமலாக்கத்துறை அதிகாரிகளில் இருவர் டெல்லியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது