புதுவை ஜோதிடர் புது முயற்சி! கிளி ஜோசியம் தெரியும்.. எலி ஜோசியம் கேள்விப்பட்டிருக்கீங்களா?

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

மனிதர்களுக்கு எப்போதெல்லாம் கஷ்டங்கள் வருகிறதோ அப்போது எல்லாம் ஆன்மீகத்தையும், ஜோதிடத்தையும் நாடுவது என்பது இயல்பான ஒன்றாக உள்ளது. தற்போது பல்வேறு துறைகளில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் கூட கிளி ஜோசியம் மற்றும் எலி ஜோசியம் என்று மக்கள் அதன் மீது நம்பிக்கை வைத்து அதை அவ்வப்போது பார்த்து வருவது உண்டு.

கிளியை வைத்து ஜோதிடம் பார்த்தால் 50 ரூபாய். ஆனால் எலியை வைத்து ஜோதிடம் பார்க்க 100 ரூபாய். இவ்வாறு 100 ரூபாய் கட்டணத்தில் எலி ஜோசியம் பார்த்து வருகிறார் முத்து என்பவர். தென்காசி குற்றாலம் பகுதியை சேர்ந்தவர் இவர் பெயர் முத்து. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு தனது குடும்பத்துடன் வந்தார். இவர் நகரப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை வாடகை எடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் வசித்து வருகிறார்.

கையில் சிறிய பெட்டியை வைத்துக்கொண்டு அதில் 2 கிளிகளுடன் ஜோதிடம் பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். மேலும் கடற்கரை சாலை, அரசு மருத்துவமனை, பாரதி பூங்கா, சட்டப்பேரவை அலுவலகம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அமர்ந்து கிளி ஜோதிடம் பார்த்து வாக்கு சொல்லி வந்தார். புதுச்சேரிக்கு வரும் மக்கள் இவருடன் அதிக பழக்கம் ஏற்பட்டதால் கடற்கரைக்கும், பூங்காவுக்கும் வரும்போது எல்லாம் இவரிடம் கிளி ஜோதிடம் பார்த்து தான் செல்வார்கள். இவரும் கிளி ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு மனதுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகளை சொல்லி அனுப்புவார்.

இந்நிலையில், கிளி ஜோதிடம் பார்த்து வந்த முத்து திடீரென்று கிளி இல்லாமல் கிளிக்கு பதிலாக எலியை வைத்து எலி ஜோதிடம் பார்த்து வருகிறார். கிளி ஜோதிடமோ எலி ஜோதிடமோ எதை இவர் பார்த்தாலும் அவரது வாடிக்கையாளர்கள் முத்துவின் வாக்கு சுத்தமாக இருக்கும் என நம்பி அவரிடம் தொடர்ந்து ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “கிளியை வைத்து ஜோசியம் பார்த்தால் நிறைய சட்ட சிக்கல்கள் இருக்கிறது. கிளி வளர்க்க கூடாது என்கிறார்கள். மேலும் அதிகாரிகள் பார்த்தால் அபராதம் விதிப்பார்கள். ஆனால் சம்பாதிப்பது என்பது கைக்கும் வாய்க்கும் எட்டவில்லை. எப்படி ஃபைன் கட்ட முடியும் என்று நினைத்துதான் கிளிக்கு பதிலாக எலியை வைத்து ஜோதிடம் பார்த்து வருகிறேன். மேலும் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு மனசுக்கு நிம்மதியாக நான்கு வார்த்தைகள் பேசும்போது அவர்களும் அதை கனிவுடன் கேட்கின்றனர்” என்று தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாடிக்கையாளர் பெயரை சொல்லி எலியிடம் சீட்டு எடுக்க சொன்னார். அப்போது கேரட் கொடுத்து எலியை அழைக்க உடனே எலி வந்து சீட்டை எடுத்து கொடுத்து விட்டு செல்கிறது. கிளி ஜோசத்திற்கு பதிலாக எலியை வைத்து ஜோசியம் பார்க்கும் முத்துவை அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தபடி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *