இது கடைசி வார்னிங்… களத்தில் காவல்துறை… கதிகலங்கும் இன்ஸ்டா பிரபலங்கள்?
-ஊடகவியலாளர் இராகவேந்திரன்
கோவையில் சமூகவிரோதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வரும்நிலையில், கோவை மாநகர காவல்துறை மிக முக்கியமான வார்னிங் ஒன்றை தந்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது. கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கோகுல்.. இவர் கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்டார்.. அந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிதான் இவர் எனவே, பழிக்குப்பழி வாங்குவதற்காகவே, கோகுல் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது..
இதையடுத்து, குரங்கு ஸ்ரீராம் நண்பர் வட்டாரத்தின் முக்கிய நபர்களை போலீசார் குறிவைத்து விசாரிக்க துவங்கினர்.. அப்படி சிக்கியவர்தான் வினோதி.. இவருக்கு தமன்னா என்று இன்னொரு பெயரும் உண்டு. 23 வயதாகிறது.. நர்சிங் படித்துள்ளார்.. ஆனாலும், தன்னுடைய ஆண்நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. குறிப்பாக, பீளமேடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, முறைகேடாக பணம் சம்பாதித்து வந்த நிலையில், கடந்த வருடம் தமன்னா கைதானார். ஆனால் ஜாமீனில் வந்தும் திருந்தாமல், மீண்டும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், சோஷியல் மீடியாவில் ரவுடி குரூப்களுடன் சேர்ந்து கொண்டு, நிறைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு, வந்துள்ளார்.. கையில் அரிவாள், வாயில் சிகரெட் என ஏராளமான வீடியோக்களை பதிவிட்டதுடன், பகையை தூண்டும் வகையில் அந்த வீடியோக்களையும் வெளியிட்டு பதற்றத்தையும் உருவாக்கினார். இதையடுத்து இவரை கைது செய்ய போலீசார் ஆயத்தமானார்கள். அப்போது தலைமறைவாக இருந்த தமன்னா, தற்போது தான் திருந்தி வாழ்வதாகவும், திருமணம் செய்துகொண்டு, இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டு, தன்னிலை விளக்கம் தந்திருந்தார். ஆனாலும், கஞ்சா கேஸ் தொடர்பாக இவரை கோவை போலீசார் கைது செய்தனர்.
வினோதினி தமன்னாவை தனிப்படை அமைத்து தேடி வந்தபோதே, கடந்த வாரம் கோவை மாநகர போலீஸார் செய்தியாளர்களிடம் பேசும்போது முக்கிய தகவல் ஒன்றை கூறியிருந்தனர்.. “மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆணையின்படி, இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோஷியல் மீடியாக்களில் ஆயுதங்களை கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது… அதன் அடிப்படையில் கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டுகின்ற தொணியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர். .. இந்நிலையில், சுய விளம்பரத்திற்காக ஆயுதங்களுடன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை காவல்துறை எச்சரிக்கை மீண்டும் விடுத்துள்ளது.
இதுகுறித்து, கோவை மாநகர போலீஸார் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.. அதில், கோவை மாநகரில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள், அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பொறுப்பற்ற வகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொண்டு வீடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர். மேற்படி ஆயுதங்களை காட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். பிக் வார்னிங் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களை காண்பித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவை மாநகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். யாராவது தேவையற்ற வகையில் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, சுய விளம்பரத்திற்காகவோ அல்லது போட்டிக்காகவோ கைகளில் ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது வீடியோ அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.