‛‛வூட்டுக்காரர் வந்து இருக்கிறாரா?” ‛‛போய்ட்டாரா.. பாவம்” உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கமெண்ட் அடித்த வீடியோ

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று மேடையில் பேசினார். அப்போது குறையை சொன்ன பெண்ணிடம், ‛‛வாயை மூடிட்டு இரு’ என சிரித்தபடியே கூறி சிக்னல் காட்டிய அமைச்சர் பொன்முடி, வூட்டுக்காரர் எங்கே? என கேள்வி கேட்டு பாவம் என்று கமெண்ட் அடித்த வீடியோ விவாதத்தை கிளப்பி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். திமுக ஆட்சியை பிடித்த நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

இதுபற்றி அமைச்சர் பொன்முடி பேசியபோது, ‛‛ஓசி” என்ற சொல்லை பயன்படுத்தினார். இது கடந்த ஆண்டு பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து சமீபத்தில் அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது சில பெண்கள் குடிநீர் வருவதில்லை என கூறினர். இந்த வேளையில் கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி ‛‛அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள்… நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு தெரியும்’ என பேசியது சர்ச்சையை கிளப்பியது.


இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் பொன்முடியின் இன்னொரு செயல் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கவனித்து செய்ய கூறினார். மாவட்ட ஆட்சியர் கூறியதுபோல் இங்கு அரசு கலை கல்லூரி வந்துள்ளது. இதுதவிர பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் தான் ஆகிறது. கிராமங்கள், நகரங்களிலும் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. எனது நண்பரான உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு மூலம் நகரங்கள், கிராமங்களில் எல்லா வகையான பணிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி எல்லோரும் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடந்து வருகிறது” என பேசினார்.

இந்த வேளையில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் குறைகள் உள்ளதாக தெரிவித்தார். இதை எதிர்பாராத அமைச்சர் பொன்முடி, ‛‛குறைகள் இருக்கிறதா?” என வினவினார். அதன்பிறகு சில வினாடிகள் யோசித்த பொன்முடி சிரித்தபடியே, ‛‛வாயை மூடிட்டு இரு’ எனக்கூறி சிக்னல் காட்டினார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் சிரித்தனர். இதனால் சிரிப்பலை எழுந்தது.

மேலும் அமைச்சர் பொன்முடி, ‛‛வூட்டுக்காரர் வந்து இருக்கிறாரா?” என கேள்வி கேட்க, ‛‛போய்விட்டார்” என பதில் வந்தது. இதைக்கேட்ட பொன்முடி ‛‛போய்ட்டாரா.. பாவம்” என கூறி சிரித்தார். அதன்பிறகு அமைச்சர் பொன்முடி ‛‛விடுங்க.. விடுங்க.. அவர் குறையை சொல்லி இருக்கிறார்” என சிரித்தபடி தொடர்ந்து பேசி சமாளித்தார். இந்நிலையில் பொன்முடி பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *