எடப்பாடியின் மாஸ்டர் பிளான், ஓபிஎஸ்-க்கு டாட்டா! நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி?
-ஊடகவியலாளர் இராகவேந்திரன்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அனைத்து அதிகாரங்களும் நிரம்பிய பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளர் ஆக பதவியேற்ற பின்னர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்தான் எடப்பாடி பழனிச்சாமி தனது மாஸ்டர் பிளானை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளதாக அதிமுகவின் எம்ஜிஆர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அதிமுக. அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஜெயலலிதாவின் வசமானது. அதிமுகவின் நிரந்தரபொதுச்செயலாளர் என்று அந்த கட்சியினரால் அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அந்த பதவி அதிகாரம் மிக்க பதவியாகவே இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டார். இதன் பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் ஒற்றைத்தலைமை விவகாரம் வெடிக்கவே தற்போது இடக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. முதல் நாள் மாவட்ட செயலாளர்களுடனும், மறுநாள் மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டங்கள் முடிந்த பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 9,10ஆம் தேதியன்று பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 11.07.2022 வரை அதிமுகவின் உறுப்பினராக இருந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்வதற்கான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 11.07.2022 வரை அதிமுகவின் உறுப்பினராக இருந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் தலைமை பதவியை முழுமையாக கைப்பற்றிய பின்னரே எடப்பாடி பழனிசாமி தனது அதிரடியை வெளிப்படுத்தப்போகிறாராம்.
சில நிர்வாகிகள் தவிர்த்து கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போகிறாராம். இதற்காக மாநிலம் முழுவதும் மிகப்பெரிய சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளாராம். லோக்சபா தேர்தலுக்குப் முன்பாக கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.
இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் ஓ.பன்னீர் செல்வம் பின்னால் சென்றவர்களும், டிடிவி தினகரனின் பின்னால் சென்றவர்களும் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய முட்டுக்கட்டைகளை எப்படி கடக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.