திருமாவை அவதூறாக பேசிய எச்.ராஜாவை மேடையிலேயே எச்சரித்த விசிக பெண்… 

சிதம்பரம் அருகே புவனகிரியில் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஹெச். ராஜா பேசியதற்கு எதிர்ப்பு. சத்தமிட்ட விசிக பெண் நிர்வாகியை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு. பாஜகவினரை அமைதி காக்க சொன்ன ஹெச். ராஜா.

சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா பங்கேற்று பேசினார். ஹெச். ராஜா திருமாவளவன் குறித்து அவதூறாக பேசி வருவதாக கூறி, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று ஹெச். ராஜா பேசினார்.

அப்போது சாலை வழியே பைக்கில் சென்ற ஒருவர் ஹெச். ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு பைக்கில் பறந்து விட்டார். அதைக் கேட்டு பாஜக தொண்டர்கள் குரல் வந்த திசையை நோக்கி வேகமாக சென்றனர். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த ஹெச். ராஜா பாஜக தொண்டர்களை அமைதியாக இருக்குமாறும், சத்தமிட்டவரை போலீசார் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் நம்மை விட சிறப்பாக கவனிப்பார்கள் என்று கூறி பாஜகவினரை அமைதிப்படுத்தினார். இதை wடுத்து பாஜகவினர் அமைதியாகினர்.

முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் செல்விமுருகன் என்பவர் அங்கு வந்து ஹெச். ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டார் இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அழைத்துச் செல்லினர். இதனால் பாஜக கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *