9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக முக்கிய பிரமுகர் கைது.

பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக கவுன்சிலர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த கணேசன் மகன் சிகாமணி,43,. இவர் அதிமுகவில் நகர் அவை தலைவராக உள்ளார். பரமக்குடி நகர் மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் புதுநகரை சேர்ந்த கயல்விழி,45,. 

இவரின் வீட்டின் அருகில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வந்துள்ளார். அந்த மாணவி பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர் மிகவும் கஷ்டப்படுவதாக கயல்விழியிடம் கூறியுள்ளார். அதற்கு தனது முதலாளியிடம் பணம் வாங்கி தருவதாக அந்த மாணவியிடம் கயல்விழி ஆசை வார்த்தைகளை கூறி அதிமுக கவுன்சிலர் சிகாமணியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கவுன்சிலர் சிகாமணி அந்த மாணவியை காரில் அழைத்துக் கொண்டு மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். 

அந்த மாணவியிடம் புதுமலர் பிரபாகரன் 42, என்ற பிரபாகரன் என்பவருடன் கயல்விழி அறிமுகப்படுத்தி உள்ளார். அதே தனியார் விடுதியில் பிரபாகரனும் அந்த மாணவியை பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதேபோல் பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்தவர் ராஜா முகமது, 36,. இவர் பரமக்குடி, பார்த்திபனூர் ஜவுளிக்கடை வைத்துள்ளதுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். 

ராஜா முகமதுவும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் மூவரும் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த மூன்று ஆண்களுடன் வலுக்கட்டாய பாலியல் வன்கொடுமை செய்வதற்கு கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய இரு பெண்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அந்த மாணவியை விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த பின்பு பிரபாகரன் பணம் தர மறுத்துள்ளார்‌. இதுகுறித்து கயல்விழி மற்றொரு நபரிடம் போனில் பேசியுள்ளார். இந்த ஆடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகாராக சென்றுள்ளது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் பரமக்குடி குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்தில் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, புதுமலர் பிரபாகரன் என்ற பிரபாகரன், ராஜா முஹம்மது, கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய ஐந்து பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டம், கூட்டு பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பிரிந்து ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு இளம் பெண்களிடம் பண ஆசையை தூண்டி, பல ஆண்களிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணையை வேகப்படுத்தினால் அதிமுகவில் பல பெரும் புள்ளிகளும் சிக்குவார்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *