ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இம்மாதம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 31ஆம் தேதி துவங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிவப்பிரசாந்த், தேமுதிக ஆனந்த் உள்ளிட்ட 46 பேர் இதுவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை். இந்நிலையில் இன்றும் நாளையும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. நாளை பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. எட்டாம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.
பத்தாம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே, அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் நாளில் வாக்கு சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெறுகிறது..